திடீரென்று, எதிர்பாராத விதமாக வந்து சேர்ந்தாள் அவள். பத்திரிகை ஆபீஸைத் தேடி பொதுவாக அலங்காரிகள் வருவதில்லை. தப்பித் தவறி யாராவது வந்துவிட்டார்கள் என்றால், அவர்கள் 'அகதி'கள் என்று சொல்லிக் கொண்டு அகப்பட்டதைப் பற்றிச் சொல்ல வரும் இனத்தினராகவே இருப்பார்கள். முதலில் அவளையும் அப்படித்தான் எண்ணினேன். 'அகதி'கள்தான் பெருத்துக் கொண்டு வருகிறார்களே இந்த நாட்டிலே! அகதிக் குடும்பங்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் சிலசமயம் அணிந்திருக்கிற ஆடைகளையும், அவர்கள் மேனி மினுமினுப்பையும் பார்க்கும்போது 'இவர்கள் எல்லாம் அகதிகள்தானா? அப்படியென்றால் நான் கூட அகதி என்று சீட்டு எழுதிக் கொண்டு கிளம்ப வேண்டியதுதான். பகவதி பிஷாந்தேஹிப் பிழைப்பிலாவது நல்ல காசு கிடைக்கும் போல் தோன்றுகிறது. இந்த எழுதிப் பிழைக்கும் வேலையில் ஒரு மண்ணும் கிடைப்பதில்லை' என்று நினைப்பதுண்டு... உம், அது வேற விஷயம்! நாகரிகமானவள் என்று விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்பியது நன்றாகத் தெரிந்தது. அவள் மின்னல் சிரிப்பு ஒன்றை உகுத்தாள்.